அமெரிக்கா வாழ் இந்தியர் ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்குக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் சமீபத்தில் வாங்கினார். இவர் வாங்கிய பொழிதில் இருந்தே ட்விட்டரில் பல மாற்றங்கள் நிகழும் என அனைவரும் எதிர்பார்த்தனர். அதன்படியே, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியரான பராக் அக்ரவால் உள்ளிட்ட ஐவரை அவர் பணியில் இருந்து நீக்கினார்.
மேலும், பல்வேறு யுக்திகளை ட்விட்டரில் புகுத்த எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளார். இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்புக்குப் புதிய அதிகாரிகளை தற்போது எலான் மஸ்க் நியமித்து வருகிறார். இந்த நியமனத்தில், இந்தியர்கள் எவரேனும் இடம்பெறுவார்களா என்ற கேள்வி தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அமெரிக்கா வாழ் இந்தியர் ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்குக்கு, தான் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்,எலான் மஸ்கின் தலைமையில் ட்விட்டர் நிறுவனம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டரில் பணிக்கு அமர்ந்துவிட்டாரா என்ற கேள்வி பரவியது. இதற்கு பதிலளித்த ஸ்ரீராம் கிருஷ்ணன், தற்காலிகமாகவே எலான் மஸ்குக்கு ஆலோசனை வழங்கி வருவதாகவும், ஏ16 இஸட் நிறுவனத்தின் முழுநேரப் பணியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் இதற்கு முன்னமும் ட்விட்டர் குழுவின் ஆலோசகராக செயலாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தில்லியில் தொடரும் அவலம்.. 5 மிருகங்கள் ஒன்றாக சேர்ந்து 14 வயது சிறுமிக்கு அரங்கேற்றிய கொடூரம்