தூத்துக்குடி குலசேகரபட்டினத்தில் நடைபெறும் தசரா திருவிழாவை முன்னிட்டு நான்கு நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் குலசேகரப்பட்டினம் முத்தராம்மன் கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டு தோறும் தசரா திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வருகிற செப்டம்பர் 26 ஆம் தேதி ‘தசரா திருவிழா’ கொடி ஏற்றத்துடன் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில், தசரா திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழ அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
குலசேர பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், வரும் 01.10.2022 முதல் 04.10.2022 வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேகர பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேகர பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக, 06.10.2022 முதல் 10.10.2022 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேற்படி பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .