ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் ஏர் கண்டிஷனிங் அளவு, 27 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் இதுவரை காணாத அளவிற்கு அதிகப்படியான வெப்ப அலைகளை எதிர்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஸ்பெயின் நாடு அதிகளவில் வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஜூலை 10-17 தேதி வரை மட்டும் வெப்ப அலைக் காரணமாக ஸ்பெயினில் 679 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஸ்பெயின் நாட்டில் வெப்பநிலை ஒரு மாதத்தில் 40 டிகிரி செல்சியஸை (104 டிகிரி பாரன்ஹீட்) தாண்டியிருக்கிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், செய்தியாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நாட்டின் வளர்ச்சி குறித்துப் பேசியிருந்தார். அப்போது, “அரசு அதிகாரிகள் மற்றும் தனியார்த்துறைகளில் பணிபுரிபவர்கள் டை (Tie) அணிவதைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் குறைந்த ஆடைகளையே அணிகிறேன். நாட்டின் வெப்பநிலை அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதனால், இறுக்கமான ஆடைகளைத் தவிருங்கள்” என்று பேசினார்.
இதுமட்டுமல்லாது, ஸ்பெயினில் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான மின்சாரச் செலவுகள் அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்தும் பேசிய ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ், ‘மின்சார சேமிப்பு என்பது தற்போது மிக அவசியமானதாக மாறியிருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது இது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “அலுவலகங்கள், கடைகள், பார்கள், திரையரங்குகள், விமான நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் ஏர் கண்டிஷனிங் அளவு 27 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் (சுமார் 80 டிகிரி பாரன்ஹீட்) இருக்க வேண்டும். 27 டிகிரி செல்சியஸுக்குக் கீழே இருக்கக் கூடாது” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய் எதிரொலி; பொது சுகாதார அவசர நிலையை அறிவித்த அமெரிக்கா