பீகார் மாநிலத்தில் 2 காவல் உதவி ஆய்வாளர்கள் உள்பட ஐந்து காவலர்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிறையில் அடைத்த சிசிடிவி காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், நவடா எஸ்.பி கவுரவ் மங்களா கடந்த 8ஆம் தேதி இரவு ஆய்வு நடத்தியபோது காவலர்கள் பணியில் அதிருப்தியடைந்து இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உள்பட 5 காவலர்களை லாக் அப்பில் அடைக்க உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அன்றிரவு சுமார் 2 மணி நேரம் வரை அடைத்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து, காவலர்களை சிறையில் அடைத்த சிசிடிவி காட்சி சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பீகார் காவல்துறை சங்கத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் குமார் சிங் முன்னதாக வெளியிட்டுள்ள அறிக்கையில், எஸ்பியை தொடர்பு கொள்ள தாங்கள் முயற்சித்ததாகவும், ஆனால் அவரை நாங்கள் பலமுறை தொடர்பு கொண்டும் எங்களது அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபற்றி அவர் கூறியதாவது :
“நவாடா காவல்துறையில் சம்பவம் நடந்தவுடன் எங்களுக்குத் தகவல் கிடைத்தது. மேலும், இச்சம்பவம் காவல் துறையினரின் வாட்ஸ்அப் குழுக்களிலும் விவாதிக்கப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் காலனித்துவ ஆதிக்க காலத்தை நினைவூட்டுகின்றன.
மேலும், இது பீகார் காவல்துறையின் மீது களங்கத்தை விளைவிக்கக்கூடும். இச்சம்பவம் குறித்து முறையான நீதி விசாரணை வேண்டும், சிசிடிவி காட்சிகளையும் முழுமையாக விசாரிக்க வேண்டும்.
என்று தெரிவித்துள்ளார்.