சூரிய கிரகணம் வருகிற 25 ஆம் தேதி நிகழ்வதால் பழனி முருகன் கோயிலில் பூஜை நேரம் மாற்றப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 25 ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுதொடர்பாக பழனி முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கந்தசஷ்டி விழா தொடங்கும் நாளன்று மாலை 5.21 மணி முதல் 6.23 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் பகல் 11.30 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்பு கந்தசஷ்டி திருவிழா காப்புக்கட்டு நடைபெறுகிறது.
பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்தும் நடை சாத்தப்படும். எனவே நண்பகல் 12.30 மணிக்கு பிறகு பக்தர்கள் யாரும் படிப்பாதை, வின்ச், ரோப்கார் ஆகியவற்றின் மூலம் செல்ல அனுமதி இல்லை.
சூரிய கிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு மேல் சம்ரோக்ஷன பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெற்று வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
கந்தசஷ்டி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருப்பது வழக்கம். அவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு கோவில் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதாவது கிழக்கு கிரிவீதி பழைய நாதஸ்வர கல்லூரி, மேற்கு கிரிவீதி மின்இழுவை ரெயில்நிலையம் எதிரே உள்ள சின்னக்குமாரர் விடுதி ஆகிய இடங்களில் பக்தர்கள் கட்டணம் ஏதும் இல்லாமல் தங்கி கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி மட்டும் இல்ல.. அக்.25ல் கண்ணு பத்திரம்.. வருகிறது இந்த ஆண்டின் கடைசி ‘சூரிய கிரகணம்’