பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் “காத்மாண்டில் உள்ள நேபாள்” என்று கூறிய கருத்து ட்விட்டரில் ட்ரெண்டாகி, அவரை இணையவாசிகள் சரமாரியாகக் கலாய்த்து வருகின்றனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தன் வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு பின்னர் இணையவாசிகளால் கலாய்க்கப்படுவது ஒன்றும் புதிதான நிகழ்வல்ல.
கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஜெர்மனியும், ஜப்பானும் எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன என கூறியது இணையத்தில் பயங்கர வைரல் ஆனது. இணையவாசிகள் அவரின் எல்லைப்பிரிப்பு கருத்தை பயங்கரமாக கலாய்த்து தள்ளினர். பிரான்ஸ் நாட்டைத்தான் தவறுதலாக அவர் ஜப்பான் எனக் கூறியிருந்தார். ஆனால், ஒரு நாட்டின் பிரதமரே இவ்வாறு தவறுதலாக கூறியதால், இந்த கருத்து பலரின் கேலியும் கிண்டலுக்கும் உள்ளானது.
இதற்கு முன்பே 2018ல் ஆப்பிரிக்காவை “வளர்ந்து வரும் நாடு” என்று கூறி சர்ச்சையில் மாட்டியிருக்கிறார். இது மட்டுமில்லாமல் 2021ல் உஸ்பெஸ்கிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது உஸ்பெஸ்கிஸ்தான் மக்களை விட அந்நாட்டைப் பற்றி தனக்குத்தான் நன்றாகத் தெரியும் என்று பேசி இணையவாசிகளிடம் நன்றாக கலாய் வாங்கிக் கட்டி கொண்டிருந்தார்.
இப்படி இணையவாசிகளிடம் கண்டபடி உளறிவிட்டு வாங்கி கட்டிக்கொள்வதையே வாடிக்கையாக வைத்திருந்த இம்ரான் கான், சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் காத்மாண்டுவில் உள்ள நேபாளில் சந்தித்தார் என்று பேசி மறுபடியும் நெட்டிசன்களிடம் மாட்டிகொண்டுள்ளார். நீங்கள் சொல்லித்தான் எங்களுக்கே தெரியும் என்று நெட்டிசன்களும் அவரை சரமாரியாக கலாய்த்து வருகின்றனர்.
உண்மையில், நேபாளில்தான் அதன் தலைநகராகிய காத்மாண்டு உள்ளது. அதைத்தான் அப்படியே தலைகீழாக திருப்பி சொல்லி அனைவரையும் நகைப்புக்கு உள்ளாகி உள்ளார். ஒரு நாட்டின் பிரதமராக இருந்து விட்டு இப்படி தொடர்ச்சியாக தவறான கருத்துகளைப் பேசி வருவதால், இம்ரான் கானை இணையத்தில் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.