சமீப காலமாகவே தமிழகத்தின் பல இடங்களில் இருந்தும் சென்னையை இணைக்கும் சாலைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பராமரிப்பு பணிகளால் சென்னை பயனப்படுவோர் பெறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் இப்படியான பராமரிப்பு பணியொன்று செஞ்சியில் உள்ள சங்கரபரணி ஆற்றின் மேம்பாலத்தில் நடைபெற்று வருகிறது. ஆதலால் செஞ்சி வழியே சென்னை வருவோர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து சென்னை வரும் பயணிகள் மிக முக்கியமாகவும், அதிகமாகவும் பயன்படுத்தும் வழியாக இருப்பது செஞ்சிதான். இந்நிலையில், கடந்த பல மாதங்களாகவே திருவண்ணாமலையில் இருந்து செஞ்சிவரை பல பகுதிகளில் சாலை பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் சென்னைக்கு வரும் பயணிகள் தொடர்ந்து இன்னலுக்குள்ளாகி வருகின்றனர்.
திருவண்ணாமலையை எடுத்துக்கொண்டால் மேம்பாலம் என்ற பெயரில் பல மாதங்களாக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்குள் செல்லும் இயல்பான வழியை அடைத்து வைத்துள்ளனர். இதனால் திருவண்ணாமலை நகரத்திற்குள் செல்வதற்கு 15 நிமிடங்கள் முதல் 25 நிமிடங்கள் வரை அதிகமாகின்றன.
மேலும், திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் வரையில் செல்லும் சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் அங்கும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இந்நிலையில், பல மாதக்கணக்காய் நடைபெற்று வரும் மேற்கூரிய பணிகளோடு தற்போது செஞ்சியின் சங்கரபரணி ஆற்று மேம்பால பணியும் இணைந்துள்ளது. இந்த ஆற்று மேம்பால பணியால் திருவண்ணாமலை – சென்னை செல்லும் வாகனங்கள் மேல்களவாய் ஊரின் வழியாக திருப்பிவிடப்பட்டு வருகின்றன.
பராமரிப்பு பணி நடைபெறுவது நல்லதுதான், இயல்பானதுதான். ஆனால், இத்தகைய பராமரிப்பு பணி பல மாத காலமாக தொடர்ந்து நடைபெற்று வந்தால் அதை யார்தான் ஒப்புக்கொள்வார்கள் என்றும், பராமரிப்பு பணி என்ற பெயரில் பராமரிப்புக்கே ஆள் இல்லாத சூழல்தான் பல இடங்களில் நிலவுகிறது என்றும் திருவண்ணாமலையில் இருந்து சென்னை பயணப்படுவோரும், அங்குள்ள பொது மக்களும் தெரிவிக்கின்றனர். மேலும், நடைபெற்று வரும் அனைத்துப் பராமரிப்பு பணிகளையும் விரைந்து முடிக்குமாறும் பொதுமக்களும், பயணிகளும் கோரிக்கை தமிழக அரசிடம் விடுத்து வருகின்றனர்.