மறைந்த ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் இன்று டோக்கியோ கொண்டு வரப்பட்டது.
எதிர்வரும் தேர்தலுக்காக ஜப்பான் நாட்டின் நாரா நகரில் பிரசாரத்தில் ஷின்சோ அபே ஈடுபட்டிருந்தபோது டெட்சுயா யமாகாமி என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த ஷின்சோ அபே, சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்ட நபரை சம்பவ இடத்திலேயே காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது அதிருப்தியில் இருந்ததால் அவரை சுட்டதாக டெட்சுயா யமாகாமி தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இவர், ஜப்பான் கடற்கரை தற்காப்பு பிரிவு முன்னாள் உறுப்பினராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் உடல் இன்று டோக்கியோவில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக ஷின்சோ அபேவின் உடல், அவரது இல்லத்தில் வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் கடுமையாக இருந்து வரும் நிலையில், அந்நாட்டு முன்னாள் பிரதமர் துப்பாக்கிச் சூட்டினால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஷின்சோ அபேவின் உயிரிழப்பைத் தொடர்ந்து பல நாடுகளின் தலைவர்களும் தங்களது இரங்கல்களைப் பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் இன்று ஒரு நாள், தேசிய அளவில் துக்க தினம் அனுசரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்திருந்தார். இதனையொட்டி இன்று இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.