பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் கொடுத்த இரண்டு திமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிலையத்தில் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயதான பெண் காவலரிடம் அக்கூட்டத்தில் இருந்த இருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அப்பெண் கதறி அழுதுள்ளார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் ஒருவரை பிடித்த நிலையில், மற்றொரு நபர் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்துள்ளார். மேலும், காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் அந்த நபரை விரட்டி சென்று பிடித்தார். பிறகு, இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இருவரும் சாலிகிராமத்தைச் சேர்ந்த பிரவீன் மற்றும் ஏகாம்பரம் என்பதும், இவர்கள் திமுக நிர்வாகிகள் என்பதும் தெரியவந்தது.
இதனிடையே, இவர்கள் இருவரையும் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்து செல்ல முற்பட்டபோது, விருகம்பாக்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அங்கிருந்த பெண் காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திமுகவினரின் இந்தச் செயலால் காவலர்களால் ஒன்றும் முடியவில்லை என தகவல் வெளியாகிய நிலையில், இதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட ஏகாம்பரம் மற்றும் பிரவீன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இவர்கள் இருவரையும் திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். பிறகு இவர்கள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, இருவருக்கும் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டி; ‘த்ரில்’ வெற்றிப் பெற்ற இந்தியா…