ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ் யூடியூபர்ஸ்களில் சினிமா சார்ந்து பிரபலமானவர், பிஸ்மி. இவர் திரைப்பட விமர்சகர், பத்திரிகையாளர் என்றெல்லாம் அறியப்படுகிறார். இவர் அவ்வபோது யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வார்.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு சேனலுக்கு பிஸ்மி அளித்த நேர்காணலானது சர்ச்சைக்குள்ளானது. அந்த நேர்காணலில், “ரஜினி சூப்பர் ஸ்டாராக இருந்தார். அவர் இப்போது முன்னாள் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டார். நடிகர் விஜய்தான் தற்போதைய சூப்பர் ஸ்டார்.” என கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. ரஜினிகாந்த் ரசிகர்கள் தங்களின் எதிர்ப்புகளை சமூகவலைதளத்தில் காண்பித்து வந்தனர்.
இச்சூழலில், சமீபத்தில் சில ரஜினிகாந்த் ரசிகர்கள் பிஸ்மியின் அலுவலகம் சென்று மிரட்டும் தொணியில் பேசியுள்ள காணொளி இணையதளத்தில் வெளியானது. இந்த காணொளி தற்போது பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ‘திரைத்துறையின் உச்ச நட்சத்திரம் குறித்துக் கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளரை மிரட்ட முனைவதா?’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
தமிழ்த்திரைத்துறையில் உச்ச நட்சத்திரம் (சூப்பர் ஸ்டார்) எனும் உயரிய இடம் எவருக்கும் நிரந்தரமானதல்ல; ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த தலைமுறைக்கேற்ப மாறக்கூடியது. திரைப்படங்களுக்கு இருக்கின்ற வரவேற்பு, மக்கள் அளிக்கும் பெருவாரியான ஆதரவு ஆகியவற்றைப் பொறுத்து அந்த இடம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது.
தமிழ்த்திரைப்படங்கள் வெளியான தொடக்கக் காலத்தில் தியாகராஜ பாகவதர் தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தார். அதன்பிறகு, ஐயா எம்.ஜி.ஆர் அவர்கள் உச்ச நட்சத்திரமாக இருந்தார். எம்.ஜி.ஆர் அவர்கள் முதல்வராக அரசியலில் கோலோச்சிய காலத்திலேயே ஐயா ரஜினிகாந்த் அவர்கள் திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்டார். அதன்பின், தற்போதைய தலைமுறையினர் பெருமளவு விரும்பத்தக்கவராக தம்பி விஜய் அவர்கள் உச்சத்தில் இருக்கிறார்.
இந்த எதார்த்தச் சூழலை விளக்கி, அதுகுறித்த தனது கருத்துகளை ஊடகத்தில் தெரிவித்ததற்காக திரை விமர்சகரும், பத்திரிகையாளருமான சகோதரர் பிஸ்மி அவர்களது அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து அச்சுறுத்த முனைந்த திரு.ரஜினிகாந்த் அவர்களின் ரசிகர்களின் செயல் நாகரீகமானதன்று.
ஐயா ரஜினிகாந்த் ரசிகர்கள் என்றால் அனுபவமும், முதிர்ச்சியும், பக்குவமும், தெளிவும் பெற்றவர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். ஆனால் அப்படியானவர்களில் சிலரே, மாற்றுக்கருத்துத் தெரிவித்ததற்காக பத்திரிகையாளர் ஒருவரது இருப்பிடத்திற்கே சென்று, ஒருமையில் பேசி மிரட்டுவது வருந்தத்தக்கதாகவும், கவலையளிப்பதாகவும் இருக்கின்றது.
இதுபோன்ற செயல்கள் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஐயா ரஜினிகாந்த் அவர்களே இதனை விரும்பமாட்டார்கள்.
இத்தகைய செயல்களானது ஐயா ரஜினிகாந்த் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தையே ஏற்படுத்தும். ஆகவே அவரது ரசிகர்கள் இனியும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான முதல் போட்டி; ‘த்ரில்’ வெற்றிப் பெற்ற இந்தியா…