நான் கிருஷ்ண பரமாத்மாவின் பேரன் என்றும் அநீதி எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவாக வந்து நிற்பேன் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமான், “திமுக அரசின் ஊழலை பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சியில் தான் ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றம்சாட்டிய சீமான், உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு வரும் போது பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்த அந்த வழக்கு தொடர்பான கோப்புகள் காணாமல் போனது எப்படி எனவும் கேள்வி எழுப்பினார்.
நாட்டைவிட்டுப் போகும்போது பாஜகவுக்கு 500 கோடி ரூபாய் கொடுத்துவிட்டு தான் சென்றதாக நீரவ் மோடி கூறுகிறார். அப்படி இருக்கும்போது திமுகவில் ஊழலை பற்றி பாஜகவினர் பேசுகிறார்கள், அதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை, திமுகவின் ஊழலைப் பற்றி பேசும் அண்ணாமலை ஏன் அதிமுகவின் ஊழலைப் பற்றி பேசுவதில்லை அதிமுக கூட்டணியில் இருப்பதால் அதை பாஜகவினர் மறைக்கின்றனர்.
மொத்தத்தில் அண்ணாமலைக்கு பாஜகவுக்கும் சாதி மதம் சாமி இதைத்தவிர பேசுவதற்கு வேறு கோட்பாடுகள் இல்லை, அரசியல் இல்லை. கேரளாவில் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் அந்த நிலை இல்லை.
நான் கிருஷ்ண பரமாத்மா பேரன். அநீதி அக்கிரமம் நடக்கும் இடத்தில் நான் வந்து நிற்பேன். இலங்கையில் இந்தியாவின் தவறான வெளியுறவுக் கொள்கை நாளில் லட்சக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஜீயர்கள், திமுக அமைச்சர்கள் நடமாட முடியாது என்று பேசுவார்கள். அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. ஆனால் என் மீது எனது கட்சியினர் மீது வழக்குகளை போடுவார்கள். தமிழ்நாட்டில் தமிழ் தேசிய அரசியலை கொள்கையாக கொண்ட நாம் தமிழர் கட்சியே உண்மையான எதிர்க்கட்சி.
2024 தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் நாம் தமிழர் கட்சி தனியாக நிற்கும். அண்ணாமலையில் அதுபோல் நிற்க முடியாது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை மூடுவது அரசுடைய விளையாட்டு. அதுபற்றி கருத்து தெரிவிக்க எதுவும் இல்லை” என்றார்.
இனி விசா விண்ணப்ப செயல்முறை எளிமை; அமெரிக்க தூதரகம் அதிரடி!