இந்திய மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையினை எளிமைப்படுத்த அமெரிக்க தூதரகத்தின் நடவடிக்கை.
இந்திய மாணவர்களுக்கான விசா விண்ணப்ப செயல்முறையை எளிமைப்படுத்த அமெரிக்க தூதரகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக, ஏற்கெனவே அமெரிக்க விசாவைப் பெற்றவர்களுக்கு நேர்காணல் சுற்றிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அமெரிக்கத் தூதரகத்தின் பொறுப்பாளர் பாட்ரிசியா லசினா தெரிவித்தார். மாணவர் விசா தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மகத்தான மதிப்பு..
மேலும் லசினா அவர்கள் பேசுகையில், எங்கள் கல்வி நிறுவனங்கள், வளாகங்கள் மற்றும் சமூகங்களுக்கு சர்வதேச மாணவர்களின் வளமான பங்களிப்புகளால் அமெரிக்கா அவர்கள் மீது ஒரு மகத்தான மதிப்பை வைத்திருக்கின்றது எனக் குறிப்பிட்டார். இது இந்தியாவைப் பொறுத்தவரை முற்றிலும் உண்மை. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர் இயக்கம் மற்றும் அது மக்களிடையே உருவாக்கும் தொடர்புகள் கடந்த 75 ஆண்டுகாலமாக அமெரிக்க-இந்தியா உறவின் ஒரு ஆணிவேராகும். அது இன்றும் அப்படியே உள்ளது.
விசா நேர்காணல்களுக்கு இந்திய மாணவர்களை அமெரிக்கா எவ்வாறு முன்னுரிமைப்படுத்துகிறது என்பது கல்விப் பரிமாற்றத்தின் முக்கியத்துவத்திற்கு சிறந்த சான்றாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மாணவர் விசா விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்வதில் எங்கள் தூதரக அதிகாரிகள் கடினமாக உழைக்கின்றார்கள். கோவிட்-19 தொற்றுநோய் இருந்தபோதிலும், மிஷன் இந்தியா 2021 திட்டத்தின் மூலம் அதிகமான மாணவர் விசாக்களை வழங்கியது என்று கூறினார்.
இதனோடு நில்லாமல் இந்த வருட கோடையில் மாணவர் சேர்க்கையில் மற்றொரு சாதனை படைப்போம் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இந்த ஆண்டு நாங்கள் பல்லாயிரக்கணக்கான விசா நேர்காணல் மையங்களைத் திறந்துள்ளோம். மற்றும் மாணவர்களுக்கான எங்கள் நேர்காணலில் சில தளர்வுகளையும் கொண்டு வந்துள்ளோம்.
புதிய விசா வழிகாட்டுதல்களின்படி, ஏற்கெனவே அமெரிக்க விசாவைக் கொண்டுள்ள மாணவர்கள் நேருக்கு நேர் நேர்காணலைத் தவிர்த்து, டிராப் பாக்ஸ் சேவையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க நாங்கள் எடுத்து வரும் பல நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் தூதரக விவகாரங்களுக்கான அமைச்சரின் ஆலோசகர் டான் ஹெஃப்லின் இந்த கோடையில் மாணவர் விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் நேர்மறையான பதிலைப் பற்றி ஊடகங்களுக்கு உரையாற்றுகையில், இந்த வருட கோடையில் மாணவர் விசாக்களுக்காக நாங்கள் முன்பை விட அதிகமான விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்வோம்.
”கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கு 62,000 விசா வழங்கியதை விட இந்த ஆண்டு அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவில் உள்ள தூதரகங்களில் இன்று 3000க்கும் மேற்பட்ட மாணவர்களை நேர்காணல் செய்வோம். புது தில்லி மற்றும் மும்பையில் தலா 1300 மாணவர்களையும், ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மூன்று துணைத் தூதரகங்களிலும் நாங்கள் நேர்காணல் செய்வோம், மொத்தம் 3000-க்கு மேல் வருமாறு நாங்கள் முயல்வோம்,” என்று ஹெஃப்லின் கூறினார்.
இந்த வருட கோடைகால விசா விண்ணப்ப நடைமுறைகளில் தொற்றுநோயின் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு ஹெஃப்லின் கீழ்வருமாறு கூறினார், “ கடந்த ஆண்டு கோவிடுக்கு முந்தைய ஆண்டுகளுக்கு நிகரான எண்ணிக்கையில் விண்ணப்பதாரர்கள் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டு அதனைவிட அதிக ஆர்வத்தினை நாங்கள் காண்கிறோம்”.
மாணவர் விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது இந்தியப் பொருளாதாரத்தின் நிலை மற்றும் 2020-2021 இன் தேவையை உணர்த்தும் விதமாக உள்ளது.
34 மாணவ மாணவிகள் தற்கொலை; அரசின் அலட்சியம் தான் காரணமா?