நேற்று நடைபெற்ற இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய அணி தற்போது நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இவற்றில் முதலாவது இருபது ஓவர் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, இரண்டாவது இருபது ஓவர் போட்டி நேற்று பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணி சார்பில் இஷன் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ரிஷப் பண்ட் 6 ரன்களுக்கு வெளியேற, இஷன் கிஷனுடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இஷன் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதைத்தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 13 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும் 13 ரன்களுக்கு சவுதி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த இரு பந்துகளில், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர் சவுதி பந்தில் வெளியேற, ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார், சவுதி.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தபடியே இருந்தாலும், மறுபுறம் சூர்யகுமார் யாதவ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நியூசிலாந்து பந்துவீச்சைத் தொடர்ந்து சிதறடித்த வண்ணம் இருந்தார். 51 பந்துகளுக்கு 111 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார், சூர்யகுமார் யாதவ். மேலும், புவனேஷ்வர் குமார் 1 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
மொத்தத்தில், இருபது ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது நியூசிலாந்து அணி.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபின் ஆலன் மற்றும் டெவான் கான்வே களமிறங்கினர். ஃபின் ஆலன் ரன் ஏதும் எடுக்காமல் புவனேஷ்குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார்.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த டெவான் கான்வே மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் சீரான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். கான்வே 25 ரன்களில் ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் மட்டும் நிலைத்து நின்று ஆட மற்ற வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். நிதானமாக விளையாடிய கேன் வில்லியம்சன் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்த நியூசிலாந்து 18.5 ஓவர்களுக்கு 126 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி நியூசிலாந்தினை 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
கால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..