3,5,8 ஆம் வகுப்பு என பலவற்றிலும் நுழைவுத் தேர்வை திணிக்கப் பார்க்கிறார்கள் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை, கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்தின் ‘நான் முதல்வன் திட்டம்’ மண்டல மாநாடு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
முந்தைய காலத்தில் பொறியியல் படிப்பில் சேர கடும் போட்டி இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் பொறியியல் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால், நிறைய காலியிடங்கள் இருக்கிறது. காலம் மாறிக்கொண்டிருப்பதால், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரி பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.
தொழிலாளர் ஆக இல்லாமல் தொழில் முனைவோராக மாணவர்களை உருவாக்குவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம் ஆகும். மாணவர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை தருபவர்களாக மாற வேண்டும். என்ஜினீயரிங் படித்து முடிப்பவர்கள், அவரவர் பகுதிகளில் சிறு, குறு தொழில்களைத் தொடங்க வேண்டும்.
அதற்காக என்ஜினீயரிங் படிப்புடன் கூடுதல் படிப்புகளை கற்பித்து சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டத்துடன் பயிற்சியும் மாணவர்களுக்கு தேவை.
‘நான் முதல்வன் திட்டம்’ வெற்றியடைய வேண்டும். திட்டத்தை வெற்றி பெற வைப்பது கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்களின் கைகளில் தான் இருக்கிறது. பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை கருணாநிதி ரத்து செய்ததால், இன்று அதிகமானோர் பொறியியல் படித்து வருகிறார்கள்.
புதிய கல்வி கொள்கை திட்டத்தின் மூலம் இன்று பலவற்றிலும் நுழைவுத் தேர்வை திணிக்கப்பார்க்கிறார்கள். 3, 5, 8-ம் வகுப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்த முயற்சி செய்கிறார்கள். அது தேவையில்லை என்ற உணர்வோடு தமிழகத்தில் புதிய கல்வி கொள்கையை முதல்-அமைச்சர் உருவாக்கி உள்ளார். அதில் ஒரு திட்டம்தான் ‘நான் முதல்வன்’ திட்டம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.