இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் முடிவுறுமா என்று உலக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்க, போரின் வீரியம் நாளுக்குநாள் அதிகரித்துதான் செல்கிறது. உலக நாடுகள் தொடர்ந்து போரை நிறுத்தச்சொல்லி அறிவுரை கூற, அந்த அறிவுரையும் வீணாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது.
போர் பற்றிய முடிவு எட்டப்படும் என உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைப்பெற்ற இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பேச்சுவார்த்தையிலும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் இன்று ஆறாவது நாள் போர் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உக்ரைனுக்கு தற்போதுதான் சில நாடுகள் உதவ முன்வந்து கொண்டிருக்கின்றன. ஸுவிடன் ஏற்கனவே உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பி உதவி செய்துவருகிறது. கனடாவும் உதவி செய்து வருகிறது. அமெரிக்கா நிதி உதவி அளிப்பதாக முன்வந்துள்ளது.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கூட ராணுவ டாங்கிகளை அழிக்கும் ஆயுதங்களை அனுப்பிவைக்க இருப்பதாக அறிவித்துள்ளார். கனடா ஏற்கனவே உடல் கவசம், தலை கவசம் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இரஷ்யா உடனடியாக போரை நிறுத்தவேண்டும் என்றும் போர் தொடர்ந்தால் அனைவருக்கும் பாதிப்பு கடுமையாக இருக்கும் எனவும் கனடா பிரதமர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான சூழலில், இரஷ்யா அதிபர் புடின், உக்ரைனுக்கு பிற நாடுகள் வழங்கும் ஆயுதங்கள் இரஷ்ய படைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட நாடுகள்தான் பொறுப்பு என்று அறிவித்துள்ளார். புடின் இவ்வாறு தெரிவித்திருப்பது, உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கான நேரடி அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது.