தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் 50 இடங்களில் பேரணிகளை நடத்துவதற்கான அனுமதியை தமிழக காவல்துறை மறுத்தது.
இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உயர்நீதிமன்றத்திடம் அனுமதிக்கோரி மனு அளித்தது. இதனை விசாரித்த தனி நீதிபதி 6 இடங்களை தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
தனி நீதிபதி விதித்த கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ்அமைப்பு இரு நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொது இடங்களில் அணிவகுப்பு நடத்துவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமை என்றும்,
இதுபோன்ற அணிவகுப்புகள், கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அரசுக்கு அதிகாரம் இருக்கிறதே தவிர, முழுமையாக தடை செய்ய முடியாது என தெரிவித்தது.
மேலும், உளவுத்துறை தகவல்கள் என்ற பெயரில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணமாக காட்டி ஒரு அமைப்பின் அடிப்படை உரிமையை மாநில அரசு தடை செய்ய முடியாது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அணிவகுப்பிற்கு தேவையான பாதுகாப்பினை வழங்கி, அதன் அடிப்படை உரிமையை உறுதி செய்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்தது.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் – தேர்தல் அதிகாரிக்கு பறந்த மனு!