ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது என நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசியுள்ளார்.
ஆர்.ஜே.பாலாஜி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க ஜெயன் கிருஷ்ணகுமார் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி பேசிய கருத்து ஒன்று முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பகிரப்பட்டு வரும் காணொளியில் அவர் பேசியுள்ளதாவது,
படத்தின் வெற்றியை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம். வருங்காலத்தில் அதிகபட்சமான பணிகளுக்கு இயந்திரங்கள் வந்துவிடும். அதற்காக இளைஞர்கள் இப்போதே அவர்களின் நேரத்தைக் கொடுத்து உழைக்க வேண்டும். படங்களின் வசூலை தெரிந்துகொள்வதில் இளைஞர்களின் ஆற்றல் வீணாகப்போகிறது.
சமீபத்தில் கூட ஒரு படத்திற்காக இளைஞன் ஒருவன் உயிர் விட்டதை அறிந்து வருத்தமாக இருந்தது. இது எல்லாம் தேவையில்லாதது. திரையரங்கிற்கு சென்று படம் பார்த்து நன்றாக இருக்கிறதா? அதை ஏற்றுக் கொள்கிறோம். நன்றாக இல்லையா? அதையும் கூறுங்கள், கற்றுக் கொள்கிறோம்.
நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து காசு கொடுத்து படம் பார்க்கிறீர்கள். அதில் நாங்கள் சொகுசாக வாழ்கிறோம். பத்திரிகைகளும், ஊடகங்களும் இளைஞர்களை கொம்பு சீவி விடும் விஷயங்களை கொடுக்காமல், அவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் விதமாக இருந்தால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
உசைன் போல்ட்டின் கணக்கில் இருந்த 103 கோடி ரூபாய் மாயம்..