தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதுவும் நேற்று இரவு முழுவதும் விடாமல் பெய்த மழை மற்றும் காற்றும் பலமாக வீசியதால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள குமுளி மலைப்பாதையில் லோயர் கேம்ப் பழைய சோதனை சாவடி அருகே சாலையின் குறுக்கே மரம் முறிந்து விழுந்தன. இதனால் தமிழகம் மற்றும் கேரள எல்லைப் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையின் இருபுறமும் அணி வகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமுளி காவல் நிலைய ஆய்வாளர் அல்போன்ஸ் ராஜா தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை வெட்டி அகற்றினர். அதன் பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது. மேலும், இன்னும் சில இடங்களிலும் குமுளி மலைப்பாதையில் ரோட்டின் குறுக்கே சாய்ந்த மரங்களையும் அகற்றினர் மற்றும் சிறிய அளவிலான மண்சரிவுகளையும் சீரமைத்தனர். தொடர் மழை பெய்து வருவதால் கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் தொடர் மழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தொடர்ந்து 23-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சுருளி அருவியின் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனை புலிகள் காப்பகத்தினர் கண்காணித்து வருகின்றனர்.
ஊட்டி சாலையோரங்களில் பூத்து குலுங்கும் செர்ரி மலர்கள்!