சின்னக் கலைவாணர் என்றதும் பலருக்கும் நியாபகம் வருபவர் விவேக் மட்டும்தான்! தற்போதோ விவேக் நம்மிடத்தில் இல்லை. கடந்த 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி மாரடைப்பால் இயற்கை எய்தினார் விவேக். இந்நிலையில் இன்று பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் மறைந்த விவேக் அவர்களை நினைவு கூறிய வண்ணம் உள்ளனர். அதற்கு காரணம், இன்று விவேக்கிற்கு பிறந்தநாள்!
தனது நடிப்பு ஆற்றலால், காமெடி திறமையால் வெறுமனே திரைப்படங்களில் நடித்துவிட்டு போகாமல், அதனூடே மக்களுக்கு பல நற்கருத்துகளை விதைத்தவர் விவேக். ஊழல், மூடநம்பிக்கை, மக்கள் தொகைப்பெருக்கம், இயற்கை சீரழிவு, வேலையின்மை போன்ற பல நிகழ்வுகளுக்காக திரைப்படத்தில் மட்டும் அல்லாது பொது வெளியிலும் விவேக் குரல் கொடுத்திருக்கிறார்.
இயற்கையின் மீதும், அப்துல் கலாம் ஐயா மீதும் மிகுந்த பற்று கொண்டவர் விவேக். அதன் விளைவாக மரம் நடுதல் தொடர்பான விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். ஒரு கோடி மரத்தை நட வேண்டும் என்பது அவரின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இறப்பு செய்த கொடுரம் முப்பது லட்சத்துக்கும் அதிகமான மரங்களை மட்டுமே அவரால், அவரின் முன்னெடுப்பால் நட முடிந்தது.
விவேக் இறந்தாலும் அவரின் முன்னெடுப்பு இறக்காது என்ற கொள்கையுடன் பலர் இருக்கின்றனர். அவர்கள் இன்றளவும் விவேக் அவர்களை நினைவு கூர்ந்து மரம் நடுதல் தொடர்பான பல நிகழ்சிகளை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.
விவேக்கின் பிறந்த நாளான இன்று, பல ரசிகர்கள் விவேக் அவர்களை நினைவு கூறும் விதமாக மரங்களை நட்டு வருகின்றனர். விவேக் என்றாலே “அவர் சிரிக்க வைத்துக்கொண்டே நம்மை சிந்திக்கவும் செய்தவர்” என்பதாகத்தான் பலரும் கூறுவர்! அப்படி பலரை சிந்திக்க வைத்த, பலரின் வாழ்வை மாற்றிய, இயற்கையை நேசியுங்கள் என்று போதித்த விவேக் அவர்களை நாம் இந்நாளில் நினைவு கூறுவோம்.
வெளியான நயன்தாராவின் புதிய திரைப்பட டீசர்; ‘இன்டர்வெல்’ இல்லாத ஒரு படம்..