ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனரான திருபாய் அம்பானி காலத்தில், அவருடைய மூத்த மகன் முகேஷ் அம்பானி 1901 ஆம் ஆண்டு தனது குடும்ப வணிகத்தில் இணைந்து செயல்பட்டார். பல நிறுவனங்களில் பல வகையான பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணிபுரிந்தார். கடந்த 2002 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி காலமான பிறகு, முகேஷ் அம்பானி மற்றும் அவரது சகோதரர் அனில் அம்பானி ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கூட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றனர். சிறிது காலத்திற்குப் பிறகு, சகோதரர்களுக்கு இடையே போட்டி உருவாக, ரிலையன்ஸின் சொத்துக்களை இருவரும் பிரித்துக் கொண்டனர். பிறகு முகேஷ் அம்பானியின் வர்த்தகம் பெருகியது. ஆனால், அனில் அம்பானி கடன்காரர் ஆனார்.
நாட்டின் முன்னணி தொழில் நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனத்தில் அடுத்தடுது்து மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அந்நிறுவனத்தின் தொலைத்தொடர்பு சேவை பிரிவான ‘ரிலையன்ஸ் ஜியோ’ இயக்குநர் பதவியை முகேஷ் அம்பானி ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் தலைவராக முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி, ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். நேற்று நடைபெற்ற குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முகேஷ் அம்பானி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்த அடுத்த நாளே, தனது மகனை தலைவராக்கி விட்டார். இருப்பினும், அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளுக்கும் உரித்தான முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்பார்ம்ஸ் லிமிடெட்டின் தலைவராக, முகேஷ் அம்பானி தொடர்ந்து நீடிப்பார்.
மேலும், ரிலையன்ஸ் ஜியோவின் நிர்வாக இயக்குநராக, பங்கஜ் மோகன் பவாரை 5 ஆண்டு காலத்திற்கு நியமிப்பதற்கும் நேற்று நடைபெற்ற குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சவுத்ரி ஆகிய இருவரும் இந்நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர்களாக பொறுப்பேற்றனர்.
ரிலையன்ஸ் ஜியோவின் இயக்குநராகவும் ஆகாஷ் அம்பானி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவை மையமாக கொண்டு, ஜியோ மொபைலை அறிமுகப்படுத்தியபோது, ஆகாஷ் அம்பானி பொறியாளர்கள் குழுவுடன் நெருக்கமாக செயல்பட்டார். அதன்பிறகு, ஜியோ கைபேசி பெரும்பாலான இந்தியர்களை 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவைக்கு மாற்றியது. இந்த கைபேசி புரட்சிக்கு பின்புலமாக ஆகாஷ் அம்பானி இருந்ததாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையில், சமீபத்திய டிராய் (தொலைத் தொடர்புத்துறை ஒழுங்கு ஆணையம்) தரவுகளின்படி, ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் மாதத்தில் மட்டும் 16.8 இலட்சம் மொபைல் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளது. அதற்கு அடுத்ததாக, பார்தி ஏர்டெல் நிறுவனம் 8.1 இலட்சம் பயனர்களை சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமாக ஜியோ தொடர்ந்து நீடிக்கிறது.
நீதிமன்றத்தை அவமதித்தாரா எடப்பாடி? வழக்கு தொடர்ந்த சண்முகம்!