உருமாறிய கொரோனா அலையைத் தடுக்க சர்வதேச விமான பயணிகளுக்கு நாளை முதல் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று 2019 ஆம் ஆண்டு சீனாவில் ஆரம்பித்தது. இதையடுத்து இந்தத் தொற்று பல மாற்றங்களை கொண்டு பல உலக நாடுகளையும் ஆட்டி படைத்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தொற்றின் வேகம் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் மீண்டும் கொரோனா (பிஎப்.7) தொற்று பரவலின் வேகம் அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் தலை தூக்கியுள்ளது. இதனால், சர்வதேச விமான பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்து இருக்கிறது.
இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறைக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் “வெளிநாடுகளில் இருந்து சர்வதேச விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும். பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் பயணிகளை அவர்களின் நாடுகளின் அடிப்படையில் விமான நிறுவனங்களே தேர்வு செய்யலாம்.
அந்த பயணிகளிடம் இருந்து மாதிரிகளை சேகரித்த பின்னரே விமான நிலையத்தை விட்டு அவர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும். பரிசோதனையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த மாதிரிகளை மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா குறித்து சமூக வலைதளத்தில் பரவி வரும் போலியான வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கர் தேர்வுப் பட்டியல் வெளியீடு; இந்தியாவுக்கு கைக்கூடுமா விருது?