95-ஆவது ஆஸ்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
திரையுலகைப் பொறுத்தவரையில் உயரிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது யாருக்கு, எந்த படைப்புக்குச் செல்கிறதென்பதை குறித்து பல்வேறு கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நிகழும்.
அந்த வகையில், வருகிற 2023-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 95-ஆவது ஆஸ்கர் விழா குறித்த கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டன. குறிப்பாக இந்தியாவில் ஆஸ்கர் விருதுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆஸ்கர் விழாவுக்காக இந்தியா சார்பில் குஜராத்தி மொழித் திரைப்படமான ‘செல்லோ ஷோ’ அதிகாரபூர்வமாகப் பரிந்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சில திரைப்படங்கள் சுயாதீனமாக விண்ணப்பித்தன.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தேர்வுப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், சிறந்த சர்வதேச திரைப்படத்துக்கான தேர்வுப் பட்டியலில் ‘செல்லோ ஷோ’ இடம்பெற்றுள்ளது. மேலும், ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலானது சிறந்த பாடலுக்கான தேர்வுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
இதைத்தவிர, சிறந்த ஆவணப் படத்துக்கான பட்டியலில் ‘ஆல் தட் பிரீத்ஸ்’, சிறந்த ஆவண குறும்படத்துக்கான பட்டியலில் ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
ஆஸ்கர் விழாவுக்கான ஒவ்வொரு விருது தேர்வுப் பட்டியலிலும் 10 முதல் 15 படைப்புகள் இடம்பெற்றுள்ளன. அவற்றைத் தேர்வுக் குழு ஆய்வு செய்து விருதுக்கான 5 சிறந்த படைப்புகள் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் தயார் செய்யப்படும்.
இந்த பட்டியலானது வருகிற ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி வெளியிடப்படும். இப்பட்டியிலில் இருந்து மிகச் சிறந்த படைப்புக்கு இறுதியாக ஆஸ்கர் விருது வழங்கப்படும்.
இறுதிப்பட்டியலுக்குள் நுழைந்த ஆர்ஆர்ஆர்; ஆஸ்கரை கைப்பற்றுமா?