ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகளை போலீஸார் நேற்று மீட்டுள்ளனர்.
இயக்குநரும் பிரபல நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் திருடிய வழக்கில், வீட்டில் வேலை செய்த பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேசன் ஆகிய இருவரும் போலீசாரால் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஈஸ்வரியிடமிருந்து 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டு சொத்து ஆவணங்கள் போன்றவை போலீசாரால் தற்போது வரை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் கைது செய்யப்பட்ட வெங்கடேசனிடம் ரூ.9 லட்சம் ஈஸ்வரி கொடுத்துள்ளார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. இத்துடன் ஈஸ்வரி தனது கணவர் அங்கமுத்து பெயரில் வங்கி கணக்கில் 350 கிராம் தங்க நகைகளை அடகு வைத்துள்ளதும், சோழிங்க நல்லூர் பகுதியில் வீடு வாங்கியிருப்பதும் தெரிய வந்தது.
விசாரணையின் திருப்பு முனையாக, ஈஸ்வரி திருடியது மற்றும் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வாங்கியது என எதுவும் அங்கமுத்துக்கு தெரியாத வகையில் ஈஸ்வரி செயல்பட்டு வந்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், விசாரணையின் அடுத்தக்கட்டத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில், நகைகள் திருடு போன வழக்கில் மேலும் 43 சவரன் நகைகளை போலீஸார் நேற்று மீட்டுள்ளனர்.
மேலும், காவல்துறையினர் வங்கி கணக்கில் அடகு வைக்கப்பட்டுள்ள தங்க நகைகளை மீட்க முயற்சிகள் எடுத்து வருகின்றனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தோனிக்கு இதுதானா கடைசி ஐபிஎல்? – பதில் சொன்ன ரோஹித் சர்மா