ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் கருதவில்லை என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 31) தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த ஐபிஎல் போட்டிகள் இம்முறை சென்னை, அகமதாபாத், மொஹலி, லக்னௌ, ஹைதராபாத், பெங்களூரு, தில்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், மும்பை, குவாஹாட்டி, தரம்சாலா ஆகிய நகரங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இந்த ஐபிஎல் தொடரே இறுதியாக இருக்குமென பலரும் தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இது குறித்து மனம் திறந்துள்ளார்.
அவர் தெரிவிக்கையில், “ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்கும் என நான் கருதவில்லை. இதை நான் கடந்த 2 முதல் 3 வருடங்களாக கேள்விப்பட்டு வருகிறேன். அவர், இன்னும் விளையாடுவதற்கான உடற்தகுதியுடன் இருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். தோனி தொடர்ந்து விளையாடுவார் என்றே நினைக்கிறேன்” என்றார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்றும் சிஎஸ்கேவின் முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் கூறும்போது, “எம்எஸ் தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்கும் என நான் கேள்விப்படுகிறேன். ஆனால், நான் அவ்வாறு நினைக்கவில்லை. தோனி அடுத்த 3 முதல் 4 ஆண்டுகளுக்கு விளையாடலாம்” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளியானது, பொன்னியின் செல்வன்-2 படத்தின் டிரைலர்!