இந்தியாவில் கடந்த 8 வருடங்களாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருக்கும் காங்கிரஸ், தொடர்ந்து பாஜக அரசின் செயல்பாடுகளை விமர்சித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அக்னிபாத் என்ற புதிய திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தை எதிர்த்து, இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இளைஞர்களின் இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி. இதில் அவர் கூறுகையில், “வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலைக் கேளுங்கள், அவர்களின் பொறுமையை அக்னி பரிட்சை செய்யாதீர்கள்” என பிரதமர் நரேந்திர மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.
இராணுவத்தில், “அக்னி வீரர்கள்” என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. ‘அக்னிபாத்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில், 4 ஆண்டுகளுக்கு வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களில் 4 ஆண்டுகள் பணியை வெற்றிகரமாக முடித்தவர்களில், 25% பேர், நிரந்தர பணிக்கு தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை இந்த திட்டம் உருவாக்கும் என, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கு பீஹார் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்தி வருகின்றனர். பல இடங்களில், இரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடந்து வருகிறது. அக்னிபாத் திட்டம் குறித்தும், இளைஞர்களின் எதிர்ப்பு போராட்டம் குறித்தும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி கருத்து தெரிவித்தார்.
இதில், ‛பதவி இல்லை; ஓய்வூதியம் இல்லை; 2 வருடங்களாக நேரடி ஆட்சேர்ப்பு இல்லை. 4 வருடங்களுக்குப் பிறகு நிலையான எதிர்காலம் இல்லை; இராணுவத்திற்கு அரசு மரியாதை காட்டவில்லை. நாட்டில் உள்ள வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களின் குரலைக் கேளுங்கள், அவர்களை அக்னிபாத்தில் நடக்க வைப்பதன் மூலம், அவர்களின் பொறுமையை அக்னி பரீட்சை செய்யாதீர்கள், பிரதமரே’ என ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் நடைபெறும் கலவரம்.. என்ன காரணம்??