வேலூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தண்டனை கொடுத்தபோது மைதானத்தை சுற்றி ஓடிய மாணவன் ஒருவன் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அதே அணைக்கட்டு அடுத்த ரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்த டெய்லர் குப்பன்-லாவண்யா தம்பதியின் மகன் மோகன்ராஜ்(13). இவர் அந்தப் பள்ளியில் ஒன்பதாவது வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் இவர்களது இரண்டாவது மகன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று மாலை ஒன்பதாம் வகுப்பு இ பிரிவு மாணவர்கள் சத்தமிட்டு பேசிக் கொண்டிருந்தார்கள் என கூறப்படுகிறது.
இதனை அறிந்த தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன், அந்த மாணவர்களை பள்ளி முழுவதும் நான்கு சுற்று ஓடி வரும்படி தண்டனை அளித்துள்ளார். இதன் படி 40 மாணவர்களும் நான்கு சுற்றுகள் ஓடினர். இதில் இரண்டு சுற்று ஓடியதுமே மோகன்ராஜ் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்கள் முதல் உதவி சிகிச்சை அளித்து பெற்றோர்கள் தகவல் அளித்து வரவழைத்தனர். அப்போது அவர்களிடம் மயக்கமாக வருவதாக மோகன்ராஜ் கூறியதும், அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
அப்போது அங்க சிகிச்சை அளிக்கும் போது திடீரென வலிப்பும் மாரடைப்பும் ஏற்பட்டு மோகன்ராஜ் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அணைக்கட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வருகின்ற திங்கட்கிழமை வரை தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும்..! சென்னை வானிலை மையம்