புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி குறித்து ஏனாம் தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ. அசோக் அவதூறாக பேசியதற்காக ஆளுங்கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி பிராந்தியத்திற்கு உட்பட்ட ஏனாம் தொகுதியில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தற்போதைய முதலமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டு தோல்வியை தழுவினார். இவரை எதிர்த்து போட்டியிட்ட கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு ஏனாம் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் சீனிவாச அசோக் ஆதரவளித்து வருகிறார். மேலும் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிட்டு தான் வெற்றி பெற்றதால், தனது தொகுதி நலத்திட்டங்களை ரங்கசாமி புறக்கணிப்பதாக அவர் குற்றம் சாட்டி வருகிறார்.
இந்நிலையில் ஏனாம் கலை விழா இன்று தொடங்கியது. 8-ந் தேதி நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நேற்று முன்தினம் மக்கள் முன்னிலையில் ஏனாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக், முதலமைச்சர் ரங்கசாமி ஏனாம் விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்தால் எவ்வளவு பாதுகாப்பு இருந்தாலும், அதனை மீறி அவர் மீது காலணியை வீசுவோம் என்று தெரிவித்திருந்தார். இது புதுச்சேரியில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனை கண்டித்து புதுச்சேரி கதிர்காமம் தொகுதிகளில் முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள், சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில், எம்எல்ஏ சீனிவாஸ் அசோக்கின் உருவப்படத்தை எரித்தும், செருப்பால் அடித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்தவுடன் அங்கு விரைந்து வந்த கோரிமேடு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இதே போல் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் என் ஆர் காங்கிரஸ் கட்சியினர், சுயேட்சை எம்எல்ஏ அசோக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அரியாங்குப்பம் பகுதியில் என்.ஆர்.காங்கிஸ் எம்.எல்.ஏ பாஸ்கர் தலைமையில் என்.ஆர். ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து புதுச்சேரி கடலூர் சாலையில் 4 முனை சந்திப்பில் திடீரென மரியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே முதலமைச்சர் ரங்கசாமியை கண்டித்து ஏனாம் தொகுதியில் அவரது ஆதரவாளர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் கொல்லப்பள்ளி சீனிவாசா அசோக் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மெரினாவில் ஜல்லிக்கட்டு’ – அனுமதி கோரியுள்ள கமல்ஹாசன்