சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் கட்சி அலுவலகத்தில் இன்று அக்கட்சியினருக்கான கூட்டம் நடைபெற்றது. அதில், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தில் கலந்துக் கொண்ட மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசினார். அவர் பேசுகையில், ‘மத்தியில் ஆளும் பாஜக அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்து மதத்தை வைத்து அரசியல் செய்வதை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் மக்களை ஒன்றிணைக்கும் வகையில் மக்களை ஒற்றுமைப்படுத்தும் வகையில் ராகுலின் நடைப்பயணம் உள்ளது’ என்றார்.
மேலும், கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது;
சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி போராட்டம் நடைபெற்று அதில் வெற்றி பெற்றதை நினைவுகூரும் விதமாக மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும்.
அதற்கு நாங்கள் அனுமதி கோரியுள்ளோம். விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.