காரைக்காலில் காலரா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் பலருக்கும் காலரா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மேலும், காரைக்காலில் துப்புரவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரயில் நிலையம், பேருந்து நிலையம், பூங்காக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனிடையே, புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கூறுகையில்,
காரைக்கால் மாவட்டத்தில் புதிய குடிநீர் குழாய்கள் பதிப்புக்கு 40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் மருத்துவமனை விரிவாக்க பணிகளுக்கு 80 கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு 2000 கோடி ரூபாய் வேண்டுமென மத்திய அரசிடம் கோரப்பட்டுள்ளது.
காங்கிரசின் கடந்த ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் தற்போது புத்துயிர் பெற்றுள்ளன. காரைக்கால் மாவட்டத்தில் ஜிப்மர் மருத்துவமனை தொடங்குவதற்கான பணிகள் நிறைவுபெற்று, விரைவில் திறக்கப்படும். காரைக்கால் மக்கள் மீது அன்பு கொண்டவன் நான், காரைக்கால் மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.