காரைக்காலில் கடந்த சில வாரங்களாகவே வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டோர் அரசு பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலருக்கு காலரா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காலரா தொற்றின் எதிரொலியாக காரைக்கால் மாவட்டம் முழுவதும் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் இதுவரை 1500-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
- காரைக்காலில் குடிநீர் குழாய்களில் விரிசல் ஏற்பட்டு, அதில் கழிவு நீர் கலந்ததாலும் சுகாதாரமற்ற குடிநீரைப் பருகியதாலும் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு வருகிறது.
- இதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல நடவடிக்கைகளையும் விழிப்புணர்வையும் காரைக்கால் நல்வாழ்வுத்துறை எடுத்து வருகிறது.
- காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை வயிற்றுப்போக்கால் யாரும் இறக்கவில்லை. இதுவரை இணை நோய் உள்ளவர்கள் 2 பேர் மட்டுமே இறந்துள்ளனர். அவர்கள், வயிற்றுப்போக்கால் இறந்துள்ளதாக தகவல்கள் பரப்புவதாக தெரிகிறது.
- பொதுமக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டியதில்லை. வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் பூரண சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கின்றனர்.
- வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
- முகநூல்களில் வரும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். அனைவரும் குடிநீரை கண்டிப்பாக கொதிக்க வைத்து குடிக்க வேண்டும். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- காரைக்கால் மாவட்டத்தில் விரைவில் இந்த நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் ஒத்துழைத்து விழிப்புணர்வை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறாக, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், காலரா தொடர்பான வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என புதுச்சேரி மாநில அமைச்சர் லட்சுமி நாராயணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொற்றுப் பரவலின் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று முதல் 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.