இந்த ஆண்டுக்கான நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகி உள்ளவர்களின் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவையொட்டி,அரசுத் துறைகள், அரசு ஊழியர்கள், அரசு சார்பு அமைப்புகள், நிறுவங்கள் ஆகியவற்றின் சிறந்த செயல்பாடுகளைக் பாராட்டும் விதமாக நல்ஆளுமை விருதுகள்வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன. செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்டு, அவர்களை தொழில் முனைவோராக வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய பணிக்காக, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கும், திருநங்கைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்ததற்காக, செங்கல்பட்டு மாவட்ட சமூகநல அலுவலருக்கும் நல்ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.
மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கி நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை செய்தற்காக திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.
அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் பேறுகால நலனை தகவல் தொழில்நுட்ப உதவிகளுடன் கண்காணித்து, சிறப்பான சுகாதார திட்டத்தை முன்னெடுத்த காரணத்துக்காக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரும் நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
வேளாண் இயந்திரங்களை கைப்பேசி செயலி வழியாக வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தியதற்காக வேளாண் பொறியியல் துறையின் முதன்மைப் பொறியாளருக்கும், சென்னையில் ஆதரவற்ற மனநிலை பாதித்தோரை மீட்டு, பராமரிக்கும் திட்டத்தை செயல்படுத்தியதற்காக சென்னை பெருநகர காவல் துறை ஆணையருக்கும் நல்ஆளுமை விருது வழங்கப்பட உள்ளது.
இந்த விருதுகள் அனைத்தும், சென்னை கோட்டை கொத்தளத்தில் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின விழாவின் போது முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும், நல்ஆளுமை விருதுடன் தலா ரூ.2 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் தொடர் விடுமுறை; பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்