சமாளிக்க முடியாத வேலைப்பளு, உடன் பணிபுரிவோர்/மேலாளரின் ஆதரவின்மை, சக பணியாளருடன் சுமுக உறவு இல்லாமை, மேலாளரின் காயப்படுத்தும் நடவடிக்கை, எந்நேரமும் பறிபோகும் வேலை, ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்வது, தகுதிக்குக் குறைந்த வேலை, சரிப்படாத வேலை நேரம், இரவு நேர வேலை,வேலையின் தன்மையால் சொந்த வேலைகளைக் கூட பார்க்க முடியாத நிலை, அதிக நேர பயணம், விடுப்பு எடுக்க முடியாத வேலைத் தன்மை, மோசமான பணியிடச் சூழல், பணியாளர் நலனில் அக்கறை இல்லாத நிறுவனம், பிடிக்காத வேலை, குறைந்த சம்பளம், பணி உயர்வு கிடைக்காதது… இப்படி பல்வேறு பிரச்சனைகள் நாம் வேலை செய்யும் இடத்தில் தினந்தோறும் எதிர்கொள்கிறோம்.
மேலும் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயநோயால் இறக்கும் அபாயம் அதிகம். மேஜை, கம்ப்யூட்டர் திரைகளுக்கு முன்பாக அமர்ந்து கொண்டு வேலை செய்வது உடலுக்கு நலனுக்கு நல்லதல்ல. நகரும்போது அல்லது ஓடும்போது செலவாகும் ஆற்றலை விட உட்கார்ந்து இருக்கும்போது குறைவான ஆற்றலை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், உடல் பருமன், அடிவயிற்றில் தேவையற்ற கொழுப்புகள் சேர்வது அதிகரிக்கும் எனத் தெரிவிக்கும் ஆய்வுகள், கடுமையான நீரிழிவு நோய், இதயநோய் மற்றும் புற்றுநோயால் இறக்கும் வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கின்றன.
திருமணமும் வேலையும் நன்றாக அமைந்து விட்டால் ஒருவரின் வாழ்வே மேன்மையடையும். இன்றைய சூழ்நிலையிலோ, ஒரு நிறுவனத்தில் 70 சதவிகிதத்துக்கும் அதிகமானோர் தங்கள் வேலையை ஈடுபாடு இல்லாமல் செய்கின்றனர். ‘மகிழ்ச்சியான தொழிலாளர்களால்தான் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது ஒரு கூற்று. இக்கட்டுரையில் அதிகமான வேலை சுமையால் ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் மற்றும் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை பார்ப்போம்.
நாள் முழுவதும் அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்கள் உலகம் முழுவதிலும் ஏற்படும் மரணங்களில் 8.8 சதவிகிதம் அளவுக்கு இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றது. புகை பிடிப்பதால் இறப்பவர்களின் எண்ணிக்கை 10.66% இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை என்பது அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது.
8 மணி நேரத்துக்கும் மேலாக ஒரு நாளைக்கு உட்கார்ந்து வேலை செய்பவர்கள் உடல் பருமன் மற்றும் புகைப்பழக்கத்தால் இறப்பவர்களுக்கு இணையான பாதிப்பை எதிர்கொள்வதாகவும், உட்கார்ந்த வாழ்க்கை முறை ஆபத்தானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பகல் நேரங்களில் குறைவாக உட்கார்தல் அல்லது சுறுசுறுப்புடன் இருந்து வந்தால் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழலாம்.
இன்றைய காலகட்டத்தில் வேளைக்கு செல்லும் பலரும் முறையான ஒரு உணவு பழக்கத்தை பின்பற்றுவது இல்லை. அதிலும் உணவுக்கு என்று ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவதில்லை. இவர்கள் முடிந்த அளவு வெள்ளை மாவு அல்லது மைதா மாவு, வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி, சர்க்கரை, சிரப், மிட்டாய் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள், பாஸ்தா போன்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க முயற்சிக்கவும். இதற்கு ஆரோக்கியமான மாற்றாக ஓட்ஸ், பழுப்பு அரிசி, குயினோவா, தானியங்கள், முழு அல்லது முளைத்த கோதுமை மாவில் தயாரித்த ரொட்டி ஆகியவற்றை சாப்பிடலாம்.
ஆல்கஹால் உட்கொள்வது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் கடுமையாக சேதப்படுத்தும். இனிப்பான உணவுப் பொருட்கள் இரத்த சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களுக்கான ஆற்றல் மட்டங்களை பாதிக்கும். மேலும் உங்கள் உடல் எடையை அதிகரித்து பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். இன்றைய தலை முறையினர் ஜுங் புட் எனப்படும் ரெடி மேட் உணவுகளுக்கு அடிமையாகி வருகின்றனர். இதனை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றாலும் முடிந்தவரை தவிர்க்க பாருங்கள்.
ஒரு நாளைக்கு 20 நிமிடங்களை உங்களால் ஒதுக்க முடியுமா? அந்த 20 நிமிடங்களுக்கு சில பயிற்சிகளைச் செய்தால் போதும்… சில வாரங்களிலேயே உங்கள் வேலையால் உங்களுக்கு ஏற்படும் டென்ஷனை கட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதோடு, அதைத் தூண்டும் ஹார்மோன்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்துவிடும்” என்கிறார்கள் மருத்துவர்கள். எளிமையான சில மூச்சுப்பயிற்சிகளை இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் தினமும் செய்யுங்கள்.
அதிகாலையில் மூச்சுப்பயிற்சி செய்வது சிறந்தது. நேராக நிமிர்ந்து உட்கார்ந்து, கண்களை முடிக்கொள்ளவும். கைகளை அடி வயிற்றில்படும்படி வைத்துக்கொண்டு, ஆழமாக மூச்சை இழுத்து, மெதுவாக வெளியேவிடவும். இப்படிச் செய்யும்போது அடிவயிற்றின் அசைவுகளை உணர முடியும். இதனால், கவனம் முழுவதும் அதில் குவிக்கப்பட்டு, உடலும் மனமும் தளர்வடைந்து இயல்புநிலையை அடையும். மேலும், இதய துடிப்பு சீராக இருப்பதால், ரத்த அழுத்தம் குறையும்; டென்ஷன் நீங்கும். இந்தப் பயிற்சியை 5-ல் இருந்து 10 நிமிடங்களுக்குச் செய்யலாம்.
வீட்டில் இருந்து விலகி சற்று தூரம் எந்தச் சிந்தனையும் இல்லாமல் நடந்து செல்வதும் ஒரு பயிற்சியே. செருப்பு வேண்டாம். வெறும் கால்களால் நடந்து தெருவுக்கு வாருங்கள். சற்று தூரம் மெள்ள நடந்து செல்லுங்கள். காலை, மாலை வேளையில் வீசும் இதமான காற்று உங்கள் முகத்தில் மென்மையாகப் படட்டும்.
ஐந்து நிமிட நடை போதும்; இதை உணர்ந்து செய்யுங்கள். உங்களிடம் உள்ள டென்ஷன் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.
உங்களை நிங்களே மகிழ்ச்சியாக வைத்து கொள்ள தினமும் அதற்கான நேரத்தை ஒதுக்கி ஒரு நகைச்சுவை சினிமாக்கள் அல்லது வீடியோக்களைப் பார்க்கலாம். உங்களுக்கு வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு மூட்டுபவர்களுடன் உரையாடலாம். மொத்தத்தில் நீங்கள் சிரிக்க வேண்டும். அவ்வளவுதான். சிரித்து சிரித்தே வேலை சுமையால் ஏற்படும் மன உளைச்சலை அகற்றிவிட முடியும்.
உங்களுக்கு பிடித்த இசையை கண்முடி ஒரு பத்து நிமிடம் கேளுங்கள். உங்களது மனது அமைதியாகும்.இதனால் எப்பேர்ப்பட்ட பதற்றத்தையும் தணித்து, மனதை அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. நீங்கள் சாதாரண பாத்ரூம் சிங்கராகக்கூட இருக்கலாம். வீட்டுக்குள்ளேயே அறைக்குள் உங்களுக்குப் பிடித்த பாடல்களைப் பாடிப் பார்க்கலாம். மனம் லேசாகும். தினசரி எட்டு மணி நேர உறக்கம் என்பது அவசியம். அப்போதுதான், அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ளவும் வேலைகளில் கவனம் செலுத்தவும் முடியும்.
வாழ்க்கையில் பிரச்னைகளே வரக் கூடாது என்று எண்ணாதீர்கள். அது வரத்தான் செய்யும். பிரச்னையில்லாமல் வாழ்க்கை இல்லை. ஆகவே, அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பது பற்றித் திட்டமிடுங்கள். இன்று, இண்டஸ்ட்ரியல் லைப்ஸ்டைலுக்குள் வந்துவிட்டோம். எனவே, நெருக்கடிகளிலிருந்து தப்பமுடியாது. வேலைநிமித்தமான அழுத்தம் என்பது இருக்கவேசெய்யும். ஆனால், அலுவலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டால், நம்முடைய பிரச்னைகளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும். வீட்டுக்கு வந்தும், அலுவலக வேலைகளைத் தொடரக் கூடாது. கூடுமானவரை இதைத் தவிர்க்கவேண்டும். வீடு என்பது வாழ்வதுக்குத்தான்!
பணி இடத்தில் ஏற்படும் தோல்விகள் என்பது பிரச்னையில்லை. ஆனால், அந்தத் தோல்விகளிலிருந்து, நீங்கள் எப்படி வெளியே வருகிறீர்கள் என்பதுதான் முக்கியம். அதற்குரிய பக்குவத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். வேலை பளுவால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு டார்க் சாக்லேட் (1.4 அவுன்ஸ்) சாப்பிடுவது மற்றும் கிரீன் டீ நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஓ! நகம் வளர்ப்பதில் இவ்வளவு இருக்கிறதா? உங்கள் நகங்களை அழகாக்க அவசியம் இதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்