பொதுத்தேர்வுகள் நேரடி முறையில் நடைபெறுமா என்ற கேள்வி இருந்த மாதங்கள் ஓடி விட்டன. இந்த வருடம் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு நடைப்பெறும் பொதுத்தேர்வுகள் குறித்த முக்கிய தகவல்கள் இன்று வெளியிடப்பட்டது.
பல நாட்களாக இன்று வருகிறது, நாளை வருகிறது என்று இழுத்தடிக்கப்பட்ட பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை, ஒரு வழியாக இன்று வெளியானது. இக்கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டார்.
அதன்படி தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்றும், பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9ஆம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6ஆம் தொடங்கி மே 30 -ம் தேதி வரை பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மே 5 முதல் மே 13 வரை நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுத்தேர்வு குறித்து வெளியிட்ட அறிக்கையில் , 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் 25-04-2022ல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளின் முடிவுகளை பொறுத்தவரையில் ஜூன் 23ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்புக்கும், ஜூன் 17ஆம் தேதி பத்தாம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.