140 கோடி மக்களும் குடியரசுத் தலைவரின் உரையை ஏற்றுக்கொண்டதாகவும் ஆனால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது அவர் ஆற்றிய உரையில், பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயர்த்தி இருப்பதாகவும், நாடு சுதந்திரம் அடைந்த பல ஆண்டுகளுக்கு பின் குடியரசுத் தலைவரால் இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இதற்காக அவருக்கு இந்த நாடும், நாட்டு மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.
குடியரசுத் தலைவர் தனது தொலைநோக்கு உரையின்மூலம் தங்களையும் கோடான கோடி மக்களையும் வழி நடத்துவதாகவும், குடியரசுத் தலைவராக அவர் பதவி வகிப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், நம் நாட்டின் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் ஊக்கமாக அமைந்திருப்பதாகவும் பிரதமர் மோடி உரையில் தெரிவித்தார்.
140 கோடி மக்களும் குடியரசுத் தலைவரின் உரையை ஏற்றுக்கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியினர் செய்த வினைகள் அவர்களைச் சுடும். ஊடகங்களின் வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிகாட்டிக் கொள்கின்றனர் என காங்கிரஸ் கட்சியினர் மீது மோடி சாடினார்.
இந்தியாவுக்கு கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருப்பதாகவும், நாடு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருவதாகவும், இந்தியா உலகின் 5-வது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
மேலும் பிரதமர் மோடி, ஐஓசி பரிசாக வழங்கிய மறுசுழற்சி செய்யப்பட்ட பெட் பாட்டில்களால் ஆன நீல நிற உடையை அணிந்து நாடாளுமன்றம் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
ரஜினிகாந்த் மோகன்லால் சந்திப்பு; இணையத்தில் வைரலான புகைப்படம்!