இந்தியாவின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த அவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ம் தேதி முடிவடையவுள்ள நிலையில் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி மதியம் மூன்று மணிக்கு ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது தேர்தல் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்த செய்திப்படி தற்போதைய குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடிவடைவதால் அதற்கு முன்னதாக அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வரைமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
ஜூலை மாதம் 18ம் தேதி நடைபெறும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலுக்கு கீழ்கண்ட விதிமுறைகள் பின்பற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவருக்கான வேட்பாளர்கள் பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் மாதம் 29ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நடைபெறும் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் மொத்தம் 4,809 வாக்காளர்கள் பங்கு பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்கு விண்ணப்பிப்போர் தங்களது விருப்பத்தினை தாங்களாகவோ அல்லது தங்களை முன்மொழிபவர்கள் மூலமாகவோ தாக்கல் செய்யலாம். விண்ணப்பத்தினை தாக்கல் செய்யும் நேரம் 11 மணியிலிருந்து மூன்று மணி வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே தாக்கல் செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் முழுவதிலும் கோவிட் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதிதாகத் தேந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் தங்களது பதவிப் பிரமாணத்தினை ஜூலை 29ம் தேதி எடுத்துக்கொள்வார்.
இந்த தேர்தலில் 4033 எம்எல்ஏக்களும், 776 எம்பிக்களுமாக மொத்தம் 4809 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். எந்த ஒரு கட்சியும் தனது கட்சியில் இருக்கும் எம்எல்ஏக்களை வற்புறுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது குடியரசுத் தலைவர் பதவியில் இருக்கும் ராம் நாத் கோவிந்த் 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் 65 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டி20; கே.எல் ராகுல் இல்லை; அப்போ கேப்டன்?