அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாடு செய்த பெண் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து உள்ளார். சென்னை, போரூர் அடுத்த முகலிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரின் மனைவி வினோதினி. இவர், கடந்த 30ம் தேதி அன்று, சின்ன போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வினோதினிக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வினோதினிக்கு வயிறு வீங்கி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர், அவர், அங்கிருந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு வினோதினியை பரிசோதித்தபோது, வயிற்றில் கசிவு ஏற்பட்டு, சிறு நீர், மலம் கசிந்து, குடல் அழுகியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உடனடியாக அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் 4 ஆம் தேதி காலை உயிரிழந்தார். இதனையடுத்து அரசு மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் தவறான சிகிச்சையால் வினோதினி இறந்ததாக கூறி, உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். பின்னர் போலீசார் தலையிட்டு, உரிய விசாரணை நடத்துவதாக தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து வினோதினியின் உடலை வீடியோ பதிவுடன் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என உறவினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இந்த வழக்கு விரைவில் விசாரணை செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் வினோதினி இறந்து 5 நாட்கள் ஆகியும் மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி வினோதினியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் முகலிவாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மாங்காடு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், நடவடிக்கை எடுக்கும் வரை கலைய மாட்டோம் என அவர்கள் உறுதியாக இருந்தனர். பின்னர் நீண்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு உறவினர்கள் கலைந்து சென்றனர்.
சாதி விட்டு சாதி திருமணம்; தீர்ப்பு வந்த கண்ணகி மற்றும் முருகேசன் ஆணவக்கொலை வழக்கு!