திருவாரூரில் துப்பாக்கியுடன் ஊழியர்களை மிரட்டும் வகையில் வங்கிக்குள் நுழைந்த போலி சாமியாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் உள்ள மூலன்குடி பகுதியைச் சேர்ந்த திருமலை சாமி என்ற போலி சாமியார், இடி மின்னல் சங்கம் என்ற அமைப்பினை நடத்தி வருகிறார்.
இவர் துறவிகள் போல் காவி உடை அணிந்து வலம் வந்துள்ளார். சாமியார் என்ற பெயரில் சுற்றித் திரிந்த இவர், தனது முகநூல் பக்கத்தில் நேரலை காணொளியை (லைவ் ஸ்ட்ரீமிங்) பதிவிட்டுள்ளார். அதனைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அந்த லைவ்வில், காவி உடையுடன் கையில் ஏதோ ஒரு பொருளை மறைத்தபடி மேற்கூரை இல்லாத ஜீப் என்று சொல்லப்படும் வாகனத்தில் ஏறுகிறார். அப்போது தான் தெரிகிறது அவர் கையில் வைத்திருப்பது துப்பாக்கி என. அந்த வாகனத்தை மற்றொரு காவி உடை அணிந்த நபர் ஓட்டுகிறார். சிறிது தூரம் சென்றதும் ஒரு தனியார் வங்கியின் வாசலில் அந்த வாகனம் நின்றது.
பிறகு வாகனத்தில் இருந்து இறங்கிய அந்தச் சாமியார் வேடம் தரித்த அந்த போலி சாமி, வங்கிக்குள் துப்பாக்கியுடன் சென்று ஊழியர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்துள்ளார். அப்படி என்ன செய்தார் தெரியுமா?
கையில் துப்பாக்கியுடன் வங்கிக்குள் சென்று அங்கு இருக்கும் ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்துள்ளார். அச்சத்தில் அந்தப் போலி சாமியாரை சமாதானம் செய்ய வங்கி ஊழியர்கள் முயன்றுள்ளனர். இந்தக் காணொளி முழுவதும் நேரலையாக முக நூலில் வெளியானது.
இதனைப்பார்த்த திருமலை காவல்துறை அந்த போலி சாமியாரை கைது செய்தனர். மேலும் விசாரணையின் போது, வங்கி கடன் தராத காரணத்தால் தான் அந்தப் போலி சாமி அவ்வாறு நடந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.