ஒருவரை மட்டும் ஹிரோவாக கொண்டாடும் கலாச்சாரத்தில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமானவர் கவுதம் கம்பீர். சமீபத்தில் இவர் தெரிவித்துள்ள கருத்து சமூகவலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது.
இது குறித்து அவர் கூறியதாவது:
விராட் கோலி சமீபத்தில் சதம் அடித்தபோது அவரை நாடே கொண்டாடியது. அதே போட்டியில் சிறிய நகரமான மீரட்டில் இருந்து வந்த புவனேஷ்வர் குமார் 5 விக்கெட்களை எடுத்தார். ஆனால், கமெண்டரியில் என்னைத் தவிர யாரும் அவரைப் பற்றி பேசவில்லை. கோலி சதத்தை மட்டும் தான் நாடே கொண்டாடியது. ஹீரோவாக ஒருவரை கொண்டாடுவதில் இருந்து இந்தியா வெளிவர வேண்டும்.
இதையும் படிங்க: ‘கோலியை ஓய்வு பெற சொல்லுங்கள் ‘ – அப்ரிடியை தொடர்ந்து சோயிப் அக்தர் சர்ச்சை கருத்து
ஊடகங்கள் ஒருவரை தொடர்ந்து கொண்டாடும் போது காலப்போக்கில் அது பிராண்டாக மாறிவிடும். அதுதான் 1983ல் நடந்தது. 2007 மற்றும் 2011லும் நடந்தது. இந்த பிரச்சினைகளுக்கு முதல் காரணம் சமூகவலைதளம் தான்.
சமூகவலைதளங்களில் அதிகப்படியான பாலோவர்கள் இருந்தால் அதுவே ஒரு பிராண்டை உருவாக்குகிறது. இரண்டாவதாக, ஊடகங்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களால் ஒருவரைப் பற்றி தினம் தினம் பேசிக்கொண்டே இருந்தால், அது நாளடைவில் ஒரு பிராண்டாக மாறிவிடும் இது 1983 இல் தொடங்கியது.
இந்தியா முதல் உலகக் கோப்பையை வென்றபோது, எல்லாம் கபில்தேவ் பற்றியது. 2007 மற்றும் 2011ல் உலக்கோப்பை வென்றபோது தோனி பற்றியது. இதுபோல் உருவாக்கியது யார்? வீரர்கள் யாரும் செய்யவில்லை. பிசிசிஐயும் செய்யவில்லை. செய்தி சேனல்களும் ஒளிபரப்பாளர்களும் இந்திய கிரிக்கெட் பற்றி எப்போதாவது பேசியதுண்டா?
இவ்வாறு அவர் கூறினார்.