புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு ஓட்டல்கள், தங்கும் விடுதிகளில் கேளிக்கை நிகழ்ச்சிகளை நகராட்சி அனுமதி பெற்று நடத்த வேண்டும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரியில் வருகிற கிறிஸ்துமஸ் மற்றும் 2023-ம் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு நட்சத்திர ஓட்டல்கள், இதர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் மற்றும் பிற இடங்களில் அனுமதிக்கப்பட்ட கேளிக்கை, விருந்து மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
இந்த நிகழ்ச்சிகளை நடத்துவோர் புதுச்சேரி நகராட்சி சட்டவிதிகளின் படி அவைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பித்து புதுச்சேரி நகராட்சி வருவாய் பிரிவு-2 கேளிக்கை உரிம கட்டணம் மற்றும் கேளிக்கை வரியை செலுத்தி முன் அனுமதி பெறவேண்டும். கேளிக்கைக்கான நுழைவு கட்டணம் தனியாக வசூலித்தாலும் அல்லது உணவு, மதுபானம் ஆகிய கட்டணங்களில் மறைமுகமாக சேர்த்து வசூலித்தாலும். நகராட்சிக்கு வரி செலுத்த வேண்டும்.
மேலும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட நிகழ்ச்சிகளை கண்காணிக்க நகராட்சி சார்பில் பறக்கும் படைகள் அமைக்கப்படும். அனுமதியின்றி மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டால் நகராட்சிகள் சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நிகழ்ச்சி நிறுத்தப்படுவதுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வணிக உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும். நகராட்சி நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது புதுச்சேரி நகரின் தூய்மையை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 11,600 கன அடியாக உயர்வு…