பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகிய திரைப்படம்தான், பொன்னியின் செல்வன்.
கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்த இத்திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் தயாரித்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வெளிவந்து பற்பல சாதனைகளை நிகழ்த்தியது. குறிப்பாக, 450 கோடி என்ற மாபெரும் வசூல் சாதனையை புரிந்தது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, நாளை டிரைலர் மற்றும் இசைவெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ ஒப்பந்தம்; ரூ.7 கோடி ஊதியம் பெறப்போகும் ஜடேஜா