தனியார் பள்ளியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர், துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் வினாத்தாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்துள்ளார், ஆயுதப்படை காவலர் பெரியசாமி. 10, 11 மற்றும் 12 -ம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக இவர் கடந்த 6 ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், இன்று அதிகாலை பெரியசாமி அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இத்தகவல் அறிந்து சிதம்பரம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பெரியசாமியின் உடலை கைப்பற்றினர். பின்பு, பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், சம்பவம் நடந்த தனியார் பள்ளியை ஆய்வு செய்தப்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், காவல் பணியில் ஈடுபட்டிருந்த பெரியசாமி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் இதற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை என்றும் கூறினார்.
மேலும், காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் பெரியசாமி தற்கொலைக்கு முன்பு ஒரு செல்போன் அழைப்பில் பேசியுள்ளதாகவும் அவருக்கு அடுத்த மாதம் 10 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்ததாகவும் இந்நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், முதற்கட்டமாக காதல், திருமணம் ஆகிய இரண்டு பிரச்சனைகள் இருந்ததாக தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பரபரப்பாக சென்ற போட்டி; மும்பையை வீழ்த்திய சன்ரைசர்ஸ்!