சென்னை: மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாக கோரி வரும், ஊதிய உயர்வை தமிழக அரசு கவனத்தில் எடுத்து வராமல் உள்ளது.
இந்நிலையில், இன்று இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் போதிலும், அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றாதது வருத்தமளிக்கிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் பிற பணியாளர்கள் அனைவருக்கும் 10.11.2021, 10.11.2022 ஆகிய தேதிகளில் தலா 15% வீதம் மொத்தம் 30% ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. போக்குவரத்துப் படி ரூ.1500-லிருந்து 100% உயர்த்தி ரூ.3,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பயிற்சியாளர்களுக்கு மட்டும் ஊதிய உயர்வும், பிற படிகள் உயர்வும் வழங்கப்படவில்லை. ஒரே துறையில் பணியாற்றும் இரு பிரிவினரை பாகுபாட்டுடன் நடத்துவது நியாயமல்ல; இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பள்ளிக்கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணி ஆணையும், ஊதிய உயர்வும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
புதுவையில் எம்.பி.சி இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய நானே களமிறங்கி போராடுவேன் – பாமக நிறுவனர்