திருவண்ணாமலை கார்த்திகை தீபம் முன்னேற்பாடுகள் குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகளுடன் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் வரும் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பத்து நாட்கள் உற்சவர்கள் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறும்.இதற்காக அண்ணாமலையாரை தரிசிக்க பக்தர்கள் திரளாக வருவர்.10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, டிசம்பர் 6ம் தேதி மகாதீப பெருவிழா நடைபெற உள்ளது.
மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், வடக்கு மண்டல ஐ.ஜி.கண்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் பங்குபெற்றனர்.