கத்தாரில் நடைபெறவுள்ள கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ள மைதானங்களில் பீர் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா எனப்படும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான உலகக் கோப்பை போட்டியானது கத்தாரில் கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது.
கத்தார் உலகக் கோப்பையை நடத்துவதை, உலக நாடுகள் வியந்து பார்த்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், உலகக் கோப்பைப் போட்டி நடைபெறும் மைதானங்களில் பீர் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இயல்பாகவே, இஸ்லாமிய நாடான கத்தாரில் பொது இடங்களில் மது அருந்த அனுமதி கிடையாது. ஃபிஃபாவுக்கு ‘பட்வைஸர்’ எனும் பீர் தயாரிப்பு நிறுவனம் விளம்பரதாரராக உள்ளதால் அந்நிறுவனத்தின் தயாரிப்பு பீர்களை மைதானங்களில் வழங்க முதலில் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கத்தார் அரசின் விதிமுறை காரணமாக மைதானங்களில் பீர் விற்கப்படாது என ஃபிஃபாவும் அறிவித்துள்ளது.
முன்னதாக, போட்டியின்போது ரசிகர்களுக்கு பீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கத்தார் அரசு முதலில் உறுதியளித்திருந்தது. ஆனால், தற்போது அந்த அறிவிப்பில் இருந்து பின்வாங்கியுள்ளது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
மேலும், கால்பந்து உலகக் கோப்பையைக் காண உலகெங்கிலும் இருந்து 12 லட்சம் பேர் வருகை தருவார்கள் என கத்தார் அரசு மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கால்பந்து உலகக் கோப்பை – விடாது துரத்தும் சர்ச்சையிலும் 220 பில்லியன் டாலர் செலவு செய்த கத்தார்..