பிரதமர் மோடியின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணி அளவில் அவர் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உங்கள் அன்புக்குரிய தாய் ஹிராபாவுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்ச்சிபூர்வமான பிணைப்பை நாங்கள் அனைவரும் அறிவோம். தாயை இழந்த துயரம் யாராலும் தாங்க முடியாதது. நான் மிகவும் வருந்துகிறேன், உங்கள் இழப்புக்காக நான் எவ்வளவு வருந்துகிறேன் என்பதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
துயரத்தின் இந்த நேரத்தில் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் இதயப்பூர்வமான இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அம்மாவுடன் நீங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளில் நீங்கள் அமைதியையும் ஆறுதலையும் பெறுவீர்கள்” என தெரிவித்துள்ளார். மேலும், இன்று நண்பகல் பிரதமர் தாயாரின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் குஜராத் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயாரின் மறைவு வருத்தமளிக்கும் நிகழ்வு ஆகும். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தாயார் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. நரேந்திர மோடி அவர்களின் வாழ்வில் அவரது தாயாரின் இடத்தை எவராலும் நிரப்ப முடியாது. பிரதமருக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள இரங்கள் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றோம். இந்த கடினமான நேரத்தில் நம் தேச மக்கள் அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.
கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்; உலகளவில் ரசிகர்கள் அஞ்சலி..