பிரபல வில்லிசை கலைஞரான சுப்பு ஆறுமுகத்தின் மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல வில்லிசை கலைஞரான சுப்பு ஆறுமுகம் 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தார். இவர் தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார்.
இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வில்லுப்பாட்டு கச்சேரியினை நடத்தி வந்தார். மேலும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தனது வில்லுப்பாட்டின் வாயிலாக மக்களை கவர்ந்தவர்.
சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டு கலையை, மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் என்.எஸ் கிருஷ்ணன் மற்றும் சுப்பையா பிள்ளை போன்றவர்களிடம் கற்றார். 1975 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார். மேலும் இவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை 2021 ஆம் ஆண்டு வழங்கி அரசு கௌரவித்தது.
இதையும் படிங்க:பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் சென்னையில் மறைவு; தலைவர்கள் இரங்கல்
இந்நிலையில், பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனது இல்லத்தில் இன்று (அக்டோபர் 10) காலமானார்.
இவரின் மறைவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் முதுமை காரணமாக சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். இராமாயணம், மகாபாரதம் ஆகிய புராணங்களையும், அரசியல், சமூகப்பிரச்சினைகளையும் வில்லுப்பாட்டின் மூலம் மக்களுக்கு விளக்கியவர்
வில்லுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு 15 நூல்களை எழுதியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற சுப்பு ஆறுமுகம் மக்கள் கலைஞராக திகழ்ந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.