காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமானதால் பரிசல் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது வியாழக்கிழமை மாலை நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்து தமிழக – கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, சினி அருவி, ஐவர் பாணி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் அதிக அளவில் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. மேலும், கர்நாடக அணைகளில் நீர் திறப்பு மற்றும் இரு மாநில காவிரி கரையோர மீன் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையினால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், பொதுமக்கள் கால்நடைகளை ஆற்றின் நடுவே அழைத்துச் செல்லவும், மீன் பிடிக்கவும் தடைவிதித்துள்ளார்.
இதன் மூலம் ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிப்பதற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை, 46-வது நாளாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, காவிரி கரையோரப் பகுதிகளில் காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.