“பழனி முருகன் கோயில் கருவறைக்குள் முக்கிய நபர்கள் பலர் நுழைந்து ஆகமவிதி மீறியது உண்மை தான்” என பழனி கோயில் அர்ச்சக ஸ்தானிகர் சங்கத்தின் தலைவர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற்றது. குடமுழுக்கு முதல் நாளான 26 ஆம் தேதி ஆகம விதிகளை மீறி சிலர் கோயில் கருவறைக்குள் நுழைந்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்யும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பழனி கோயில் அர்ச்சக ஸ்தானிகர் சங்கத்தின் தலைவர் பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவில், ஆகம விதிகளை மீறி கருவறைக்குள் அவர்கள் நுழைந்தது மாபெரும் குற்றம் என்றும் அதை பார்த்துவிட்டு அமைதியாக இருந்த அர்ச்சகர்களின் செயல் தவறானது என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு சிலர் பணம் என்கிற நோக்கத்தில் செயல்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டதாகவும் இது கேவலமானது என்றும் கூறி இருக்கும் அவர், வருகிற ஆனி மாதம் பழனி கோயில் மூலவர் சிலைக்கு மீண்டும் மருந்து சாத்தப்பட்டு, மீண்டும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அர்ச்சகர் சங்கம் சார்பில் கூட்டம் கூட்டி கலந்து பேசி அதிகாரிகளிடம் எடுத்துரைத்து செயல்படலாம் என்றும் கூறியுள்ளார். தொடரும் அர்ச்சகரின் ஆடியோவில் இதற்கு சம்மதித்து அர்ச்சகர்கள் ஒன்று சேர வேண்டும் என்றும், இல்லை எனில் கருவறையில் நடந்த உண்மைகளை பொதுவெளியில் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
“நேர்மையாக செயல்படாமல், துர்சக்திகளை வைத்து செயல்படுவது நமக்கும், நமது சமூகத்திற்கும், உலகத்திற்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அமைச்சர்கள் கருவறைக்குள் நுழையும்போது கையை பிடித்து இழுத்து தடுத்து பிரச்சனை செய்தது ஊருக்கே தெரிந்துவிட்டது.
இருப்பினும் நம்மில் இருக்கும் ஒரு சிலரால் அவர்கள் கருவறைக்குள் நுழைந்து விட்டார்கள். அதனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து மீண்டும் நல்லது நடக்க செயல்பட வேண்டும்” என பழனி கோயில் அர்ச்சக ஸ்தானிகர் சங்கத்தின் தலைவர் பேசுவது அந்த ஆடியோவில் இடம்பெற்றுள்ளது.
முதலையிடம் இருந்து மானை காப்பாற்றும் யானை! வைரல் காணொளி