பிச்சைக்காரன்-2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்ட நிலையில், தற்போது அவர் 90 சதவீதம் குணமடைந்துள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது மழை பிடிக்காத மனிதன், அக்னிச் சிறகுகள், பிச்சைக்காரன்-2 போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இதில் பிச்சைக்காரன்-2 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்றது.
இப்படத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கவும் செய்கிறார் விஜய் ஆண்டனி. மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்ற படப்பிடிப்பில் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, படகு விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் விஜய் ஆண்டனிக்குக் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, விஜய் ஆண்டனி உடல்நிலைக் குறித்து பல்வேறு வதந்திகள் பரவின.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 24-ஆம் தேதி பதிவொன்றை பதிவு செய்தார். அதில் ‘அன்பான நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன்-2 படத்தில் நடிக்கும்போது, ஏற்பட்ட விபத்தில் கடுமையான பாதிப்புக்குள்ளான தாடை மற்றும் மூக்கு தற்போது சரியாகி வருகிறது. பெரிய அறுவை சிகிச்சை முடிந்துள்ளது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்களுடன் பேச உள்ளேன். உங்களின் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தான் 90 சதவீதம் குணமடைந்துள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். மேலும், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘அன்பு இதயங்களே, நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்.. வரும் ஏப்ரல் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன்..அன்புக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
‘குரங்கு பொம்மை’ பட இயக்குநர் இயக்கத்தில் விஜய் சேதுபதி