பாகிஸ்தானில் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு 1000-ஐ தாண்டியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பாகிஸ்தான் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரையில், 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். 1,527 பேர் காயமடைந்துள்ளனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரையில் பாகிஸ்தானில் 3,451 கி.மீ. சாலைகள், 147 பாலங்கள், 170 கடைகள், 9 லட்சத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், ராணுவத் தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வா இருவரும் பலூசிஸ்தான் மற்றும் சிந்து மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மறுகுடியமர்வு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தனர்.
பாகிஸ்தான் இப்பேரிடரை எதிர்கொள்ள போதிய முன்னேற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. தற்போது சர்வதேச நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் அமெரிக்கா 16 கோடி டாலரும், பிரிட்டன் 15 லட்சம் பவுண்டுகளும் வழங்க முடிவு செய்துள்ளன. ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஈரான் ஆகிய இஸ்லாமிய நாடுகளும் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு தேவையான உதவியை வழங்குவதாக உறுதியளித்துள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் பாகிஸ்தானுக்கு நிவாரண உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமீரகத்தின் நிவாரண உதவியில் 3,000 டன் உணவுப் பொருள்கள், மருத்துவப் பொருள்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருள்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.